செய்திகள்
நீலகிரி மாவட்டத்தில் சமூக இடைவெளிக்கு ஏற்பாடு செய்யாத 157 கடைக்காரர்கள் மீது வழக்கு
நீலகிரி மாவட்டத்தில் சமூக இடைவெளிக்கு ஏற்பாடு செய்யாத 157 கடைக்காரர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
ஊட்டி:
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. ஆரம்பத்தில் நீலகிரி மாவட்டத்தில் காய்கறி, பழம், மளிகை, மருந்து, இறைச்சி போன்ற அத்தியாவசிய கடைகள் மட்டும் செயல்பட்டன. அதன்பிறகு ஊரடங்கு கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, அனைத்து தனிக்கடைகளும் திறந்து செயல்பட்டு வருகிறது. கடைகளில் வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க கோடுகள் அல்லது வட்டங்களை குறிப்பிட்ட இடைவெளியில் தரையில் வரைய வேண்டும், வாடிக்கையாளர்கள் கைகளை கழுவ தண்ணீர், சோப்பு வைக்க வேண்டும் என்பன போன்ற ஏற்பாடுகளை கடைக்காரர்கள் செய்ய அறிவுறுத்தப்பட்டு இருந்தது.
நீலகிரியில் சமூக இடைவெளியை கடைபிடிக்காத கடைகளுக்கு பறக்கும் படையினர் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க ஏற்பாடு செய்யாத கடைக்காரர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகிறார்கள். நீலகிரி மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் இதுவரை சமூக இடைவெளிக்கு ஏற்பாடு செய்யாத 157 கடைக்காரர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். சம்பந்தப்பட்ட கடைகளை மூடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.