செய்திகள்
புதுச்சேரி தலைமை செயலகம்

தமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து

Published On 2020-06-09 07:48 GMT   |   Update On 2020-06-09 07:59 GMT
தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி:

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு வருகிற 15-ந்தேதி நடைபெற இருப்பதாக அரசு அறிவிப்பு வெளியிட்டு அதற்கான ஏற்பாடுகளை செய்தது. அதனை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் ஆசிரியர் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், 15ந்தேதி பத்தாம் வகுப்பு தேர்வை தொடங்க அனுமதிக்க முடியாது என்று கூறி, விசாரணையை வரும் 11ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இந்த நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர், தமிழகத்தில் நடைபெற இருந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முழுமையாக ரத்து செய்யப்படுவதாகவும், அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாகவும் அறிவித்தார்.

தமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை முதலமைச்சர் நாராயணசாமி வெளியிட்டார். 

கொரோனா தாக்கம் அதிகரித்து இருக்கும் இந்த சூழ்நிலையில், பொதுத்தேர்வை இப்போது நடத்தக்கூடாது என பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News