செய்திகள்
மரணம்

வீட்டுக்குள் அழுகிய நிலையில் டீ மாஸ்டர் உடல், கொலை செய்யப்பட்டாரா?- விசாரணை

Published On 2020-06-03 08:34 GMT   |   Update On 2020-06-03 08:34 GMT
வேலூர் சத்துவாச்சாரியில் வீட்டுக்குள் அழுகிய நிலையில் டீ மாஸ்டர் உடல் கிடந்தது. அவர் அடித்து கொலை செய்யப்பட்டாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வேலூர்:

வேலூர் சத்துவாச்சாரி வ.உ.சி.நகர் 4-வது தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (வயது45). அரப்பாக்கத்தில் உள்ள ஓட்டல் ஒன்றில் டீ, புரோட்டா மாஸ்டராக வேலை செய்து வந்தார்.

அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் சத்துவாச்சாரி போலீசில் புகார் செய்தனர்.

வீட்டின் கதவை திறந்து போலீசார் உள்ளே சென்று பார்த்தபோது சுரேஷ் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். உடலை மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

சுரேஷ் சில ஆண்டுகளாக அந்தப்பகுதியில் வசித்து வந்துள்ளார். ஆனால் அவரது சொந்த ஊர் மற்றும் குடும்பம் குறித்த விவரம் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கும், உடன் வேலை செய்தவர்களுக்கு தெரியவில்லை. அவருக்கு குடிப்பழக்கம் இல்லை என கூறப்படுகிறது.

வீட்டின் கதவு உள்பக்கம் பூட்டப்படவில்லை. இதனால் அவரது சாவில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவர் இறந்து 3 நாட்கள் ஆகியிருக்கலாம்.அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News