ரெட்டியார்பாளையத்தில் மனைவி- குழந்தைகள் பிரிந்து சென்ற ஏக்கத்தில் கணவர் தற்கொலை
புதுச்சேரி:
புதுவை ரெட்டியார் பாளையம் முத்துப்பிள்ளை தோட்டம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 45). இவர் சலவை தொழில் செய்து வருகிறார்.
இவருக்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பின்பு மூர்த்தி அவருடைய மனைவி- 2 மகள்களுடன் சென்னையில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
இந்நிலையில் அவரது மனைவி மற்றும் மகள்கள் மூர்த்தியை விட்டு பிரிந்து சென்றுவிட்டனர். அவர்கள் எங்கு சென்றார்கள் என்பது இதுவரை தெரியவில்லை.
இதனால் மன வருத்தம் அடைந்த மூர்த்தி முத்துப்பிள்ளை தோட்டத்தில் உள்ள தனது தம்பி அய்யப்பனுடன் 6 மாதமாக வசித்து வந்தார்.
கடந்த சில நாட்களாக மூர்த்தி மனைவி மற்றும் மகள்கள் பிரிந்து சென்ற ஏக்கத்தில் தினமும் குடித்து விட்டு சோகமாக இருந்தார்.
மேலும் அவருக்கு உடல் நலக் குறைபாடும் இருப்பதால் மன வேதனையில் இருந்த அவர் இரவு சாப்பிட்டு விட்டு தூங்க சென்றார்.
காலையில் அவருடைய தம்பி மனைவி எழுந்து பார்த்த போது வீட்டு பக்கத்தில் உள்ள வேப்ப மரத்தில் மூர்த்தி வேட்டியால் தூக்குபோட்டு தொங்கினார்.
பின்னர் இது குறித்து அய்யப்பன் கொடுத்த புகாரின் பேரில் ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.