செய்திகள்
மரணம்

ஆற்காடு அருகே டிரான்ஸ்பார்மரில் ஏறி தொழிலாளி தற்கொலை

Published On 2020-05-31 10:37 GMT   |   Update On 2020-05-31 10:37 GMT
ஆற்காடு அருகே டிரான்ஸ்பார்மரில் ஏறி தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆற்காடு:

ஆற்காடு அடுத்த கலவை புத்தூர் ரோடு பகுதியை சேர்ந்தவர் ஜீவானந்தம் (வயது 44). கூலித்தொழிலாளி. இவரது மனைவி முத்துலட்சுமி தெய்வானை இவர்களுக்கு 2½ வயதில் பெண் குழந்தை உள்ளது.

கணவன்- மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கடந்த 2 ஆண்டுக்கு முன்பு முத்துலட்சுமி கணவரை பிரிந்து பெண் குழந்தையுடன் சென்னையில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

மனைவி, குழந்தை பிரிந்து சென்றதால் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் ஜீவானந்தம் சுற்றி வந்துள்ளார்.

இந்த நிலையில் இன்று அதிகாலை 5 மணிக்கு ஜீவானந்தம் கலவை புத்தூர் ரோட்டில் திருமண மண்டபம் எதிரே உள்ள டிரான்ஸ்பார்மரில் ஏறி மின்கம்பியை பிடித்துள்ளார்.

அப்போது மின்சாரம் தாக்கி உடல் கருகிய நிலையில் டிரான்ஸ்பார்மரில் தொங்கினார்.

இதனை கண்ட அப்பகுதி மக்கள் மின்வாரிய அதிகாரிகள் மற்றும் கலவை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அப்பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு கலவை போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்தனர்.

டிரான்ஸ்பார்மரில் இறந்து கிடந்த ஜீவானந்தம் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து கலவை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News