செய்திகள்
அரியலூர் அருகே வாலிபரை தாக்கியவர் கைது
அரியலூர் அருகே வாலிபரை தாக்கியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆண்டிமடம்:
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே உள்ள விளந்தை தெற்கு தெருவை சேர்ந்தவர் ஆனந்தராஜ் (வயது 29). எம்.எஸ்.சி., பி.எட் படித்துவிட்டு விவசாய வேலை செய்து வருகிறார். இவருக்கும், அதே தெருவில் வசிக்கும் தர்மராஜ்(44) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ஆனந்தராஜ் தனது தாத்தா கருப்பையாவை தனது மோட்டார் சைக்கிளில் அழைத்துக்கொண்டு விளந்தை திலகர் நகர் அருகே வந்து கொண்டிருந்தார்.
அப்போது அங்கு நின்று கொண்டிருந்த தர்மராஜ், ஆனந்தராஜ் வாகனத்தை வழிமறித்து, உருட்டுக்கட்டையால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதில் காயமடைந்த ஆனந்தராஜ் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து ஆண்டிமடம் போலீஸ் நிலையத்தில் ஆனந்தராஜ் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் வழக்குப்பதிவு செய்து தர்மராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.