தவளக்குப்பம் அருகே மோட்டார் சைக்கிள் வாங்க தாய் பணம் தராததால் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை
பாகூர்:
தவளக்குப்பம் அருகே நல்லவாடு கிராமம் தில்லையம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் செல்வி. மீன் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மகன் சரண்(வயது21). இவர் 10-ம் வகுப்பு வரை படித்து விட்டு மீன் பிடி தொழில் செய்து வந்தார்.
கடந்த சில நாட்களாக சரண் தனது தாயிடம் புதிய மோட்டார் சைக்கிள் வாங்க பணம் கேட்டு வற்புறுத்தி வந்தார். அதற்கு செல்வி சில நாட்கள் கழித்து பணம் தருவதாக கூறி வந்தார்.
அதுபோல் நேற்று காலை சரண் தனது தாய் செல்விடம் புதிய மோட்டார் சைக்கிளுக்கு முன் பணம் செலுத்த பணம் தருமாறு கேட்டார். அப்போது செல்வி பலரிடம் வட்டிக்கு பணம் கேட்டும் யாரும் தரவில்லை என்பதால் பிறகு பணம் கிடைத்தவுடன் தருவதாக மகனை சமாதானம் செய்தார்.
பின்னர் செல்வி மீன் வியாபாரத்துக்கு சென்று விட்டார். இந்த நிலையில் மோட்டார் சைக்கிள் வாங்க தாய் பணம் தராததால் விரக்தியடைந்த சரண் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து வீட்டில் இரும்பு பைப்பில் நைலான் கயிற்றால் தூக்குபோட்டுதொங்கினார். உடனே அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சரணை அருகில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே சரண் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் தவளக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.