செய்திகள்
அம்மாபேட்டை அண்ணாநகரில் காற்றில் தூக்கி வீசப்பட்டு கிடந்த வீட்டின் மேற்கூரை

அம்மாபேட்டை பகுதியில் சூறாவளியுடன் மழை- வீடுகளின் மேற்கூரைகள் காற்றில் பறந்தன

Published On 2020-05-28 12:58 GMT   |   Update On 2020-05-28 12:58 GMT
அம்மாபேட்டை பகுதியில் சூறாவளியுடன் மழைபெய்ததால் வீடுகளின் மேற்கூரைகள் காற்றில் பறந்தன. மரங்கள் மின்கம்பங்களின் மீது விழுந்ததால் மின்சாரம் தடைபட்டது.
அம்மாபேட்டை:

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை பகுதியில் நேற்று காலையில் இருந்து கடும் வெயில் அடித்தது. இந்தநிலையில் மாலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

அம்மாபேட்டை சுற்றுவட்டார பகுதிகளான கோனார்பாளையம், மூங்கில்பாளையம், மசகவுண்டனூர், கொமராயனூர், மாத்தூர், மறவபாளையம், வெள்ளித்திருப்பூர், சென்னம்பட்டி, ஜரத்தல், தொப்பபாளையம், புரவிபாளையம் ஆகிய பகுதிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவு மழை பெய்தது. அப்போது பலத்த சூறாவளி காற்று வீசியது. இந்த சூறாவளிக்காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் 100-க்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்தன.

சனிச்சந்தை அண்ணா நகரில் 6 வீடுகளின் மேற்கூரைகள் காற்றில் பறந்தன. தொப்பபாளையத்தில் மின்கம்பங்களின் மீது மரங்கள் விழுந்ததால் மின் கம்பிகள் அறுந்து விழுந்தன. இதனால் பல இடங்களில் இரவு முழுவதும் மின் தடை ஏற்பட்டது. மேலும் வாழைகள், பப்பாளி மரங்கள் பலத்த காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் சாய்ந்தன. சில இடங்களில் வீட்டிற்கு முன்பு போடப்பட்டு இருந்த பந்தல்கள் சரிந்தன. வீடுகளின் ஓடுகளும் சேதம் அடைந்தன. ஏராளமான வாழைகள் சாய்ந்ததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொப்பாளையம் பகுதியில் மின்வினியோகம் சீராக மின்வாரிய ஊழியர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
Tags:    

Similar News