நண்பரிடம் தகராறு செய்ததை தட்டிக் கேட்ட மீன்பிடி தொழிலாளி உள்பட 4 பேருக்கு கொலை மிரட்டல்
புதுச்சேரி:
புதுவை வைத்திக்குப்பம் பச்சைவாழி அம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது45). இவரது மகன் பவிலன். இவர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார்.
இந்நிலையில் வைத்திக்குப்பத்தில் உள்ள மைதானத்தில் மனோத் என்பவர் மது குடித்து கொண்டிருந்தார். இதனை பவிலனின் நண்பரான வினோத் என்பவர் தட்டிக் கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனை அந்த வழியாக சென்ற சோலைநகரை சேர்ந்த சிலர் தட்டிக் கேட்டுள்ளனர். இதில் வினோத்திடம் தகராறு செய்து விட்டு அவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர்.
இதனையறிந்த வினோத்தின் நண்பரான பவிலன், சிவா, சுரேந்தர், நஷி ஆகியோர் சோலை நகரை சேர்ந்த தட்சணாமூர்த்தி, சிவன், விக்னேஷ் முருகன் ஆகியோரிடம் இதுகுறித்து தட்டிக்கேட்டுள்ளனர்.
இதில் ஆத்திரமடைந்த சோலைநகரை சேர்ந்த 4 பேரும் சேர்ந்து பவிலனையும் அவரது நண்பர்களையும் ஆபாச வார்த்தைகளால் திட்டியுள்ளார். மேலும் அங்கிருந்த தடியால் தாக்கி கொலை செய்து விடுவதாகவும் மிரட்டல் விடுத்தனர்.
இதில் பவிலன் காயம் அடைந்தார். அவரை அவரது நண்பர்கள் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச் சைக்காக அனுமதித்தனர்.
இதுகுறித்து பவிலனின் தந்தை பாஸ்கர் சோலைநகர் புறக்காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சோலைநகரை சேர்ந்த தட்சணாமூர்த்தி, சிவன், விக்னேஷ், முருகன் ஆகிய 4 பேரையும் தேடி வருகின்றனர்.