செய்திகள்
கைது

சமையல் கியாஸ் சிலிண்டர் திருடிய 2 பேர் கைது

Published On 2020-05-16 18:53 IST   |   Update On 2020-05-16 18:53:00 IST
திருச்சி அருகே சமையல் கியாஸ் சிலிண்டர் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மலைக்கோட்டை:

திருச்சி ஸ்ரீரங்கம் நெல்சன் ரோடு அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் லட்சுமணராஜன் (வயது 36). இவர் சிந்தாமணி பகுதியில் உள்ள ஒரு சமையல் கியாஸ் ஏஜென்சி நிறுவனத்தில் சிலிண்டர் சப்ளை செய்யும் பணியாளராக வேலை பார்த்து வருகிறார்.

இவர், நேற்று காலை திருச்சி பெரியகடைவீதி பகுதியில் வெள்ளை வெற்றிலை தெருவில் வாடிக்கையாளர் ஒருவருக்கு கியாஸ் சிலிண்டர் சப்ளை செய்ய எடுத்து சென்றார். அப்போது அவரது இரு சக்கர வாகனத்தில் 4 சிலிண்டர்கள் இருந்தது. அப்போது அவரது வண்டியில் இருந்த ஒரு சமையல் கியாஸ் சிலிண்டரை எடுத்துக்கொண்டு 2 பேர் ஓட்டம் பிடித்தனர்.

அதைக்கண்ட லட்சுமணராஜன் சுதாரித்து கொண்டு திருடன்... திருடன் என உரக்க கத்திக் கொண்டே துரத்திக் கொண்டு ஓடினார். அப்பகுதியில் இருந்தவர்கள் உதவியுடன் சிலிண்டரை திருடிக்கொண்டு ஓடிய இருவரையும் மடக்கி பிடித்து கோட்டை குற்றப்பிரிவு போலீசில் ஒப்படைத்தார். அவர்களை சப்-இன்ஸ்பெக்டர் கருணாகரன் கைது செய்தார். விசாரணையில் கைதானவர்கள் திருச்சி சங்கிலியாண்டபுரம் பாரதி தெருவைச் சேர்ந்த ஷேக்தாவூத் (30), திருநாவுக்கரசு (21) ஆகியோர் என்பது தெரியவந்தது.

Similar News