செய்திகள்
கைது

ஆரோவில் அருகே பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த ரவுடி உள்பட 5 பேர் கைது

Published On 2020-05-13 14:54 IST   |   Update On 2020-05-13 14:54:00 IST
புதுவையை அடுத்த தமிழக பகுதியான ஆரோவில் அருகே பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த ரவுடி உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
சேதராப்பட்டு:

புதுவையை அடுத்த தமிழக பகுதியான ஆரோவில்லை அடுத்த இடையஞ்சாவடி கிராமம் உள்ளது. இங்குள்ள சர்வதேச குதிரை பண்ணை சாலையில் பயங்கர ஆயுதங்களுடன் சிலர் பதுங்கி இருப்பதாக ஆரோவில் போலீசாருக்கு தகவல் வந்தது. தகவலின் பேரில் ஆரோவில் இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ், சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

அப்போது போலீசார் வருவதையறிந்த அந்த கும்பல் தப்பியோட முயற்சித்தது. உஷாரான போலீசார் அந்த கும்பலை நாலாபுறமும் சுற்றி வளைத்து மடக்கி பிடித்தது. அப்போது அவர்களிடம் கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்கள் இருப்பதை கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் அந்த கும்பலிடம் விசாரணை நடத்தியதில் இடையஞ்சாவடியை சேர்ந்த மணிகண்டன் (வயது24), புதுவை பகுதி ஆலங்குப்பத்தை சேர்ந்த தமிழ்செல்வன்(22), ராயப்பேட்டையை சேர்ந்த முருகன் (20), கோட்டகரையை சேர்ந்த வேல்முருகன் (23), நாராயணமூர்த்தி (25) ஆகியோர் என்பது தெரியவந்தது.

பின்னர் 5 பேர் கொண்ட அந்த கும்பலை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். இதில் மணிகண்டன் என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சங்கர் கொலை வழக்கில் சிறைக்கு சென்று ஜாமீனில் வெளிவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News