செய்திகள்
மஞ்சள் ரேஷன் கார்டுகளுக்கு இலவச அரிசி வழங்க கோரி- பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டம்
மஞ்சள் ரேஷன் கார்டுகளுக்கு இலவச அரிசி வழங்க கோரி மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. தலைமையில் பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
புதுச்சேரி:
சிகப்பு ரேஷன் கார்டு வைத்திருக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கு தலா 5 கிலோ வீதம் 3 மாதங்களுக்கு 15 கிலோ அரிசி வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் மஞ்சள் ரேஷன் கார்டுதாரர்களிடம் இலவச அரிசி வழங்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. மஞ்சள் ரேஷன் கார்டுகளுக்கு இலவச அரிசி கேட்டு இன்று பா.ஜனதா கட்சியின் நிர்வாகிகள் தங்கள் வீடுகளின் முன்பு தனிநபர் ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதன்படி லாஸ்பேட்டையில் உள்ள பா.ஜனதா கட்சி அலுவலகத்தில் மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த போராட்டங்களில் சமூக இடைவெளியை கடைபிடித்து நிர்வாகிகள் பதாகைகளுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பா.ஜ.கவின் போராட்டத்திற்கு ஆதரவாக அந்த பகுதியைச் சேர்ந்த மக்களும் பங்கேற்றனர்.
முதலியார்பேட்டை தொகுதியில் பா.ஜனதா நகர மாவட்ட தலைவர் வக்கீல் அசோக்பாபு தனது இல்லத்தின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். இந்த ஆர்ப்பாட்த்தில் தொகுதி தலைவர் பிரகாஷ், மாவட்ட துணைத்தலைவர் விஜயரங்கம், நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, பழனிவேல், பச்சையப்பன், சங்கர், ராஜீ, வினோத், நந்தா உள்பட பலர் கலந்து கொண்டு சமூக இடைவெளியை கடைபிடித்தனர்.
இதேபோல் புதுவை மற்றும் காரைக்கால் பகுதியில் உள்ள மாநில, மாவட்ட, தொகுதி நிர்வாகிகள் தங்கள் வீடுகள் முன்பு பதாகைகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.