செய்திகள்
கைது

ஆரோவில் அருகே அ.ம.மு.க. மாநில நிர்வாகி திடீர் கைது

Published On 2020-05-11 15:04 IST   |   Update On 2020-05-11 15:04:00 IST
ஆரோவில் அருகே அமைச்சர் விஜயபாஸ்கர் பற்றி விமர்சித்த அ.ம.மு.க. மாநில நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.

சேதராப்பட்டு:

புதுவையை அடுத்த தமிழக பகுதியான ஆரோவில் அருகே இடையஞ்சாவடியை சேர்ந்தவர் முத்துகுமார் (வயது40). இவர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாநில தகவல் பிரிவு தொடர்பு செயலாளராக இருந்து வருகிறார்.

இந்நிலையில் புதுக்கோட்டை போலீசார் இன்று காலை இடையஞ்சாவடிக்கு வந்தனர். அவர்கள் வீட்டில் இருந்த முத்துகுமாரை திடீரென கைது செய்து அழைத்து சென்றனர்.

இது குறித்து போலீசாரிடம் விசாரித்தபோது கடந்த சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் விஜயபாஸ்கர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதனை முத்துகுமார் வருங்கால முதல்-அமைச்சர் விஜயபாஸ்கர் என சித்தரித்து சமூக வலைதளத்தில் அவதூறாக பரப்பியதால் அமைச்சர் விஜயபாஸ்கர் கொடுத்த புகாரின் பேரில் கைது செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.

அ.ம.மு.க. பிரமுகர் திடீரென கைது செய்யப்பட்டதால் ஆரோவில் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Similar News