செய்திகள்
தற்கொலை

மகள்களின் கல்வி கட்டணத்தை செலுத்த முடியாததால் தாய் தற்கொலை

Published On 2020-03-03 09:55 GMT   |   Update On 2020-03-03 09:55 GMT
மகள்களின் கல்வி கட்டணத்தை செலுத்த முடியாததால் தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பவானியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பவானி:

ஈரோடு மாவட்டம் பவானி பழனிபுரம் 4-வது வீதியை சேர்ந்தவர் இளஞ்செழியன். தனியார் நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வருகிறார்.

இவரது மனைவி ரேகா (36). தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இவரது மூத்த மகள் தனியார் கல்லூரியிலும், மற்றொரு மகள் தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பும் படித்து வருகிறார்கள்.

இரு மகள்களுக்கும் கல்வி கட்டணத்தை செலுத்துமாறு பள்ளி மற்றும் கல்லூரி நிர்வாகம் கூறி உள்ளது. ஆனால் பணம் இல்லாததால் கட்டணத்தை செலுத்த முடியவில்லை.

இதனால் ரேகா மன வேதனையில் இருந்தார். திடீரென அவர் கதவை உள்பக்கம் தாழ்போட்டு கொண்டு தீக்குளித்தார். உடலில் தீப்பிடித்ததும் வலி தாங்க முடியாமல் அலறியபடி கதவை திறந்து வெளியே வந்தார்.

இதனை பார்த்த அவரது கணவர் மற்றும் இளைய மகள் ஆகியோர் அருகில் இருந்த போர்வையை எடுத்து ரேகா மீது பற்றிய தீயை அணைத்தனர். பின்னர் ரேகாவை ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அவர் மகள்களுக்கு கல்விக் கட்டணம் செலுத்த முடியாததால் தற்கொலைக்கு முயன்றதாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார்.

இதற்கிடையே நேற்று சிகிச்சை பலன் இன்றி ரேகா இறந்து விட்டார். இது குறித்து பவானி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மகள்களின் கல்வி கட்டணத்தை செலுத்த முடியாததால் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பவானியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News