செய்திகள்
கொள்ளையடிக்கப்பட்ட மாரியம்மன் கோவில்

விருத்தாசலம் அருகே மாரியம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை

Published On 2020-02-01 19:40 IST   |   Update On 2020-02-01 19:40:00 IST
விருத்தாசலம் அருகே மாரியம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
விருத்தாசலம்:

விருத்தாசலம் அருகே பரவலூர் கிராமத்தில் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை என்பதால் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் முடிந்த உடன் கோவில் பூசாரிகள் கோவிலை பூட்டிவிட்டு வழக்கம்போல வீட்டிற்கு சென்றனர்.

நள்ளிரவு சமயம் மர்ம நபர்கள் அங்கு வந்தனர். அவர்கள் கோவில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

இன்று காலை கோவிலில் நடைதிறப்பதற்காக பூசாரி மணி வந்தார். அப்போது கோவிலின் முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்ற பார்த்து பார்த்த போது உண்டியல் பூட்டு உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது கண்டு பதறி போனார்.

இந்த தகவல் அந்த பகுதியில் காட்டு தீ போல பரவியது. இதனால் ஏராளமான பக்தர்கள் திரண்டனர்.

இதுகுறித்து கோவில் பூசாரி மணி விருத்தாசலம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து கோவிலுக்கு சென்றனர். கோவிலை சுற்றிலும் பார்வையிட்ட போலீசார் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News