செய்திகள்
விபத்து

கடலூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்- டிரைவர் பலி

Published On 2020-01-27 16:32 GMT   |   Update On 2020-01-27 16:32 GMT
கடலூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கடலூர் முதுநகர்:

கடலூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் டிரைவர் உயிரிழந்தார். இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

விருத்தாசலம் அருகே மேலக்குப்பம் கொல்லிருப்பு ஆடியகுளத்தை சேர்ந்தவர் மாணிக்கம். இவருடைய மகன் மணிகண்டன் (வயது 28). கார் டிரைவர். இவர் நேற்று தனது நண்பரான அதே ஊரை சேர்ந்த ராஜ்குமாருடன் கடலூருக்கு மோட்டார் சைக்கிளில் வந்தார். பின்னர் அவர்கள் விருத்தாசலம் செல்வதற்காக கடலூர்- சிதம்பரம் சாலையில் சென்று கொண்டிருந்தனர். கடலூர் முதுநகர் அடுத்த தனியார் பள்ளி அருகே சென்ற போது, எதிரே வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மணிகண்டன், ராஜ்குமார் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டனர். இதில் படுகாயமடைந்த 2 பேரையும் அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் அவர்கள் 2 பேரும் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மணிகண்டன் பரிதாபமாக உயிரிழந்தார். ராஜ்குமாருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது பற்றி மணிகண்டன் மனைவி தீபா கடலூர் முதுநகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News