செய்திகள்
செந்துறை அருகே கோஷ்டி மோதல்- 3 பேர் கைது
செந்துறை அருகே முன்விரோத தகராறில் கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர். 7 பேரை தேடி வருகிறார்கள்.
செந்துறை:
அரியலூர் மாவட்டம்செந்துறை அருகே உள்ள இலைக் கடம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிலம்பரசன். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டனுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.
சம்பவதன்று வயலுக்கு சென்ற சிலம்பரசனை மணிகண்டன் தரப்பினர் வழிமறித்து தாக்கியதாக தெரிகிறது. இது குறித்து சிலம்பரசன் கொடுத்த புகாரின் பேரில் செந்துறை போலீசார் மணிகண்டன், வெற்றி, வேலு உள்ளிட்ட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து 2 பேரை கைது செய்தனர்.
அதேபோன்று மணிகண்டனின் தந்தை செல்வமணி கொடுத்த புகாரின்பேரில் சிலம்பரசனை கைது செய்து செந்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜெயங்கொண்டம் சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய 7 பேரை செந்துறை போலீசார் தேடி வருகின்றனர்.