செய்திகள்
எச் ராஜா

பெரியார் பற்றி விமர்சனம்: ரஜினிகாந்துக்கு எச்.ராஜா ஆதரவு

Published On 2020-01-19 10:53 GMT   |   Update On 2020-01-19 12:00 GMT
துக்ளக் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பெரியார் பற்றி விமர்சனம் செய்தார். இதற்கு பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா ஆதரவு தெரிவித்துள்ளார்.

சென்னை:

துக்ளக் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசுகையில், “பெரியார் தலைமையில் ராமர், சீதை உருவங்கள் நிர்வாணமாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. மேலும், செருப்பு மாலை போடப்பட்டது” என்று கூறினார்.

ரஜினியின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

ஆனால் பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா ரஜினிக்கு ஆதரவு தெரிவித்து உள்ளார். அவர் கூறியதாவது:-

எந்த சலசலப்புக்கும் அவர் அஞ்ச மாட்டார். துக்ளக் ஆண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் தப்பாக எதுவும் பேசவில்லை, திராவிடர் கழகம், வீரமணி, சுப.வி. போன்றவர்கள் இந்து விரோதிகள், இவர்களிடம் எந்த பகுத்தறிவும் கிடையாது. 1971-ம் ஆண்டு சேலத்தில் நடத்தப்பட்ட மூடநம்பிக்கை மாநாடு என்ற பெயரில் இந்து விரோத மாநாடு நடத்தப்பட்டது.


அதில் வேறு எந்த மதத்தையும் பற்றி பேசவில்லை. ரஜினி விழாவில் மேற்கோள் காட்டியது ஒரு சின்ன பகுதி மட்டுமே, தாங்கள் தொடர்ந்து மெய்களை பரப்ப கூடியவர்கள் என்று தி.க.வினர் நினைக்கிறார்கள். மேலும் துக்ளக் விழாவில் பேசியதற்காக  ரஜினியை மிரட்ட நினைக்கிறார்கள், எந்த சலசலப்புக்கும் அவர் அஞ்ச மாட்டார்.

இவ்வாறு அவர் கூறினார்.

எச்.ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில், ‘ஈ.வெ.ரா. தொடர்ந்து இந்து கடவுள் விக்கிரகங்களை உடைப்பது, இந்து கடவுள்கள் பற்றி இழிவாக பேசுவது போன்றவற்றை வாழ்நாள் முழுவதும் செய்தவர் தான். ஆகவே நண்பர் ரஜினிகாந்த் பேசியதில் எந்த சர்ச்சையும் இல்லை’ என பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News