செய்திகள்
மீனவர்கள் விரட்டியடிப்பு (கோப்பு படம்)

புதுக்கோட்டை மீனவர்கள் 13 பேர் படகுடன் சிறைப்பிடிப்பு - இலங்கை கடற்படையினர் நடவடிக்கை

Published On 2019-12-29 07:18 GMT   |   Update On 2019-12-29 07:18 GMT
புதுக்கோட்டை மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படையினர் படகுடன் சிறைப்பிடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அறந்தாங்கி:

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினத்தில் விசைப் படகு மீன்பிடி தளங்கள் உள்ளன. இந்த மீன்பிடி தளங்களில் இருந்து சுமார் 750-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் மூலம் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் விசைப் படகு மீன்பிடி தளங்களில் இருந்து சுமார் 450க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில், 1,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

அவர்கள் இந்திய கடல் எல்லை பகுதியான நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக கூறி, 3 விசைப் படகுகளில் மீன் பிடித்து கொண்டிருந்த மீனவர்களை சிறைப்பிடித்தனர்.

முத்தையன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் மீன்பிடித்து கொண்டிருந்த காளிதாஸ், ராக்கப்பன், மற்றொரு காளிதாஸ், ஆதவன், ஹரிஷ் மற்றும் சேகர் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் மீன் பிடித்து கொண்டிருந்த சுந்தர், சின்னத்தம்பி, பிரவீன், ராஜாராம் மற்றும் அண்ணாத்துரை என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் மீன்பிடித்து கொண்டிருந்த அண்ணாதுரை, தம்பிராஜ், முத்து, முருகன் ஆகிய 13 பேரையும் விசைப் படகுகளுடன் சிறைப்பிடித்தனர்.

இலங்கை கடற்படையினர், அவர்களை காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று ஊர்க்காவல்படை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைக்கின்றனர்.

புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் 13 பேர் இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்டதை அறிந்த ஜெகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினம் மீனவர்கள் கவலையடைந்துள்ளனர். அவர்களது குடும்பத்தினரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். எனவே சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News