செய்திகள்
கோப்பு படம்.

ஸ்ரீமுஷ்ணம் அருகே வாகன சோதனையில் வாலிபரிடம் ரூ.60 ஆயிரம் பறிமுதல்

Published On 2019-12-20 05:09 GMT   |   Update On 2019-12-20 05:09 GMT
ஸ்ரீமுஷ்ணம் அருகே தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காரில் வந்த வாலிபரிடம் இருந்து ரூ.60 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர்.

ஸ்ரீமுஷ்ணம்:

கடலூர் மாவட்டத்தில் வருகிற 27 மற்றும் 30-ந் தேதி 2 கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.

உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சியினர் மற்றும் வேட்பாளர்கள் தங்களது ஆதரவாளர்களுடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதை தொடர்ந்து வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கப்படுவதை தடுக்கும் பொருட்டு கடலூர் மாவட்ட கலெக்டர் அன்பு செல்வன் உத்தரவின் பேரில் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பு மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள பாளையங்கோட்டை பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரியும், தாசில் தாருமான அன்பழகன் தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர் ஜவகர்சிங் மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி காரில் இருந்தவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அதில் அவர் சென்னை பெருங்களத்தூர் பகுதியை சேர்ந்த சுரேஷ்(வயது 29)என்பது தெரிய வந்தது. அவரது காரை சோதனை செய்தபோது அதில் இருந்த ரூ.60 ஆயிரத்தை பறக்கும் படை அதிகாரிகள் கைப்பற்றினர்.

பின்னர் பணத்திற்கான ஆவணங்கள் எதுவும் உள்ளதா? என சுரேசிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து சுரேஷ் காரில் கொண்டு வந்த ரூ.60 ஆயிரத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த பணத்தை ஸ்ரீமுஷ்ணம் வட்டார வளர்ச்சி அலுவலர் சுகுமாரிடம் ஒப்படைத்தனர்.

Tags:    

Similar News