செய்திகள்
வேலூர் அடுக்கம்பாறை ராணுவ வீரர் வீட்டில் 20 பவுன் நகை திருட்டு
வேலூர் அடுக்கம்பாறையில் முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் பட்டப்பகலில் புகுந்து 20 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்று விட்டனர்.
வேலூர்:
வேலூர் அடுக்கம்பாறை மூவேந்தர் நகரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 47). முன்னாள் ராணுவ வீரர். தற்போது சென்னையில் செக்யூரிட்டியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி நேற்று மதியம் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றிருந்தார். அந்த நேரத்தில் மர்ம நபர்கள் வீட்டின் கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.
அங்கு பீரோவில் இருந்த 20 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்று விட்டனர். வெளியே சென்றிருந்த ராணுவ வீரர் மனைவி திரும்பி வந்தபோது வீட்டில் கொள்ளை நடந்திருப்பதைக் கண்டு திடுக்கிட்டார்.
இதுபற்றி பாகாயம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குபதிவு செய்து இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர் .
மேலும் கொள்ளை நடந்த வீட்டில் கைரேகைகள் சேகரிக்கப்பட்டன. பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.