செய்திகள்
செந்துறை அருகே இளம்பெண் மின்சாரம் பாய்ந்து பலி
செந்துறை அருகே மாட்டிற்கு தண்ணீர் வைக்க சென்ற இளம்பெண் மின்சாரம் பாய்ந்து பலியானார்.
செந்துறை:
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள சென்னிவனம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம் மனைவி ஜோதி (வயது 40). கணவரை இழந்த இவர் மேட்டுப்பாளையம் கிராமத்தில் உள்ள அவரது உறவினர் வீட்டில் தனது மகள் சந்திரலேகாவுடன் வசித்து வந்தார். பிழைப்புக்காக அவர் கறவை மாடுகள் வைத்து உள்ளார். அதன் மூலம் தனது குடும்பத்தை நடத்தி, மகளையும் வளர்த்து வந்தார். இந்த நிலையில் இன்று அதிகாலை வழக்கம் போல் கறவை மாட்டிற்கு தண்ணீர் வைப்பதற்கு வீட்டின் முன்பு இருந்த அன்னக்கூடையை எடுத்துள்ளார்.
அப்போது அங்கு வீட்டிற்கு வரும் மின்சார வயர் அறுந்து கிடந்ததுள்ளது. இதனை கவனிக்காமல் அலுமினிய அன்னக்கூடையை ஜோதி எடுத்தபோது அவரது உடலில் மின்சாரம் பாய்ந்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். ஜோதியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தும் அவரை காப்பாற்ற முடியவில்லை.
இது குறித்து தகவல் அறிந்த செந்துறை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஜோதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.