அம்மாபேட்டை அருகே 9-ம் வகுப்பு மாணவன் விஷம் குடித்து தற்கொலை
ஈரோடு:
அம்மாபேட்டை அடித்த அலங்காரியூர் பகுதியை சேர்ந்தவர் செங்கோட்டையன். கூலி தொழிலாளி. இவரது மகன் சுரேஷ் கிருஷ்ணன் (வயது14). இவர் பூதப்பாடியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 27-ந் தேதி தேர்வு முடிந்து மார்க் சீட் கொடுக்கப்பட்டது. இதில் சுரேஷ் கிருஷ்ணன் குறைந்த மதிப்பெண்கள் பெற்றதாக கூறப்படுகிறது. தந்தையிடம் மார்க்சீட் காண்பித்து கையெழுத்து வாங்க பயந்த சுரேஷ் கிருஷ்ணன் வீட்டிலிருந்த விஷத்தை குடித்து வாந்தி எடுத்துள்ளார்.
இது குறித்து அவர் தந்தை கேட்டபோது தான் விஷம் குடித்து விட்டதாக சுரேஷ் கிருஷ்ணன் கூறினார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் அந்தியூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சிகிச்சை முடிந்து மாணவன் வீடு திரும்பினார். பின்னர் மீண்டும் வாந்தி எடுத்துள்ளார். இதையடுத்து சுரேஷ் கிருஷ்ணனை சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி சுரேஷ் கிருஷ்ணன் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.