செய்திகள்
கொள்ளை

மொடக்குறிச்சி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை- பணம் திருட்டு

Published On 2019-12-06 17:18 GMT   |   Update On 2019-12-06 17:18 GMT
மொடக்குறிச்சி அருகே பட்டப்பகலில் துணிகரமாக வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்று உள்ளனர்.
மொடக்குறிச்சி:

மொடக்குறிச்சி அருகே உள்ள செல்லாத்தபாளையத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 45). இவருடைய மனைவி ஜோதி (40). 2 பேரும் கட்டிட தொழிலாளர்கள். இவர்களுடைய மகன் விவேக் (21). இவர் நஞ்சை ஊத்துக்குளியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.

நேற்று முன்தினம் வழக்கம்போல் 3 பேரும் வேலைக்கு சென்றுவிட்டனர். வேலை முடிந்ததும் செல்வராஜ் மாலையில் வீ்ட்டுக்கு வந்து உள்ளார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனே அவர் பதற்றத்துடன் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அங்கு பீரோவில் வைக்கப்பட்டிருந்த 6 பவுன் சங்கிலி மற்றும் ரூ.18 ஆயிரத்தை காணவில்லை. ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் பட்டப்பகலில் துணிகரமாக வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று அங்கிருந்த நகை மற்றும் பணத்தை திருடி சென்றது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை மற்றும் பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

இதேபோல் புஞ்சைபுளியம்பட்டி டாணாபுதூர் அவினாசி சாலையில் வசித்துவரும் ராம்சன் என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து அங்கு நிறுத்தப்பட்டு இருந்த மொபட் திருடப்பட்டது. மேலும் மேட்டுப்பாளையம் சாலையில் வசித்து வரும் ஓய்வு பெற்ற ஆசிரியர் ரத்தினசாமி (60), அவினாசி சாலையில் வசித்து வரும் திருநங்கை ஓவியா (25) ஆகியோரது வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி நடந்தது.

இந்த சம்பவத்தால் அந்த பகுதி பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் புஞ்சைபுளியம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News