செய்திகள்
ஜெயங்கொண்டம் அருகே அரசு போக்குவரத்துக்கழக ஊழியர் வீட்டில் கொள்ளை
ஜெயங்கொண்டம் அருகே நள்ளிரவில் அரசு போக்குவரத்துக்கழக ஊழியர் வீட்டில் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தண்டலை கிராமத் தைச்சேர்ந்தவர் ராமானுஜம் (வயது 48). இவர் ஜெயங்கொண்டத்தில் உள்ள அரசு போக்குவரத்துக்கழக பணி மனையில் மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டை பூட்டிவிட்டு அவர் பணிக்கு சென்றார். அவரது மனைவி மற்றும் பிள்ளைகள் அருகில் உள்ள கூரை வீட்டில் தூங்க சென்றனர்.
இன்று காலை 6.30 மணியளவில் இரவு பணியை முடித்துவிட்டு வீட்டுக்கு ராமானுஜம் வந்தார். அப்போது பூட்டியிருந்த வீட்டின் கதவுகள் கடப்பாரையால் உடைக்கப்பட்ட நிலையில் திறந்து கிடந்ததை பார்த்து ராமானுஜம் அதிர்ச்சி அடைந்தார். வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, அங்குள்ள பீரோவும் உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த 7 பவுன் தங்க நகை, வெள்ளி கொலுசுகள் மற்றும் ரூ.20 ஆயிரம் பணம் கொள்ளை போயிருந்தது. நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர்கள் வீட்டில் ஆட்கள் இல்லாத ததை நோட்டமிட்டு கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர்.
இதுகுறித்து ராமானுஜம் கொடுத்த புகாரின்பேரில் சம்பவம் நடந்த வீட்டிற்கு வந்த ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த துணிகர கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.