செய்திகள்
மழை

ஈரோட்டில் தொடர்ந்து பெய்துவரும் மழை - முழு கொள்ளளவில் நீடிக்கும் பவானிசாகர் அணை

Published On 2019-11-22 18:20 IST   |   Update On 2019-11-22 18:20:00 IST
ஈரோடு மாவட்டத்தில் மழை தொடர்ந்து பெய்து வருவதால் பவானிசாகர் அணை தனது முழு கொள்ளளவான 105 அடியிலேயே நீடிக்கிறது.
ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை ஒரு வாரத்துக்குப் பிறகு தற்போது தொடர்ந்து பெய்து வருகிறது.

நேற்று முன்தினம் மாவட்டம் முழுவதும் கனமழை கொட்டியது. இதில் குண்டேரிபள்ளம், வரட்டுப்பள்ளம் மற்றும் கொடிவேரி அணை பகுதிகளில் கனமழை பெய்தது.

இந்த நிலையில் நேற்று இரவும் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது.

ஈரோட்டில் நேற்று மாலை 4 மணியளவில் சுமார் 20 நிமிடம் மழை பெய்தது. புறநகர் பகுதியிலும் இந்த மழை கொட்டியது. இதேபோல் கோபி, சென்னிமலை, மொடக்குறிச்சி, பெருந்துறை, கவுந்தப்பாடி, பவானி உள்பட அனைத்து பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. இந்த மழையால் ரோட்டின் இருபுறமும் தண்ணீர் ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது.

மேலும் இன்று காலையும் ஒருசில இடங்களில் மழை பெய்து வருகிறது. இன்று காலை கோபி, சத்தி உள்பட பல இடங்களில் பனிமூட்டம் காணப்பட்டது.

இதேபோல் பவானிசாகர் அணை தனது முழு கொள்ளளவான 105 அடியிலேயே அணையின் நீர்மட்டம் நீடிக்கிறது. மேலும் அணைக்கு கணிசமான அளவிலும் தண்ணீர் வரத்து உள்ளது.

இன்று காலை 8 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 3687 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பவானி ஆற்றுக்கு வினாடிக்கு 1600 கனஅடியும், கீழ்பவானி வாய்க்காலுக்கு 2100 கனஅடியும் என உபரிநீர் அப்படியே திறந்து விடப்பட்டு வருகிறது.

Similar News