செய்திகள்
மரணம்

ஈரோட்டில் இலங்கை அகதி தீக்குளித்து பலி

Published On 2019-11-22 10:10 GMT   |   Update On 2019-11-22 10:10 GMT
ஈரோட்டில் இலங்கை அகதி தீக்குளித்து பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரண நடத்தி வருகின்றனர்.

ஈரோடு:

கன்னியாகுமரி மாவட்டம் விலவன்கோடு இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வருபவர் லோகநீதி (வயது 33). இவரது மனைவி செல்வி(28). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். லோகநீதி பெயிண்டிங் வேலை செய்து வந்தார். இந்நிலையில் லோக நீதிக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் லோகநீதி கடந்த 2 மாதத்திற்கு முன்பு கோபித்துக் கொண்டு ஈரோடு மாவட்டம் ஈஞ்சம் பள்ளி இலங்கை அகதிகள் முகாமில் இருக்கும் தனது தாயாருடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் சம்பவத்தன்று லோகநீதி வாழ்க்கையில் விரத்தியடைந்து தற்கொலை செய்ய முடிவெடுத்து வீட்டின் கழிவறைக்கு சென்று திடீரென மண்ணெண்ணையை தனக்குத்தானே உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

அவரது அலறல் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி லோகநீதி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து மலையம் பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News