செய்திகள்
அரியலூர் அருகே லாரி-பைக் மோதல்: தேமுதிக நிர்வாகி பலி
அரியலூர் அருகே லாரியும், பைக்கும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் தே.மு.தி.க. நிர்வாகி பலியானார்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள அணிக்குறிச்சியை சேர்ந்தவர் கவியரசன் (வயது 35). அரியலூர் மாவட்ட தே.மு.தி.க. பொருளாளராக இருந்து வந்தார். நேற்று மாலை அரியலூர் சென்ற அவர், அங்கு வேலைகளை முடித்து விட்டு இரவு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டார். தேளூர் போலீஸ் நிலையம் அருகே அரியலூர்-ஜெயங்கொண்டம் சாலையில் சென்று கொண்டிருந்தார்.
போலீஸ் நிலையம் முன்பு சாலையில் வைக்கப் பட்டிருந்த பேரிகார்டு பகுதியை கடந்து தேளூர் பிரிவு சாலைக்கு செல்ல முயன்றார். அப்போது எதிரே ஜெயங்கொண்டத்தில் இருந்து பெரம்பலூருக்கு ஜல்லிக் கற்கள் ஏற்றுவதற்காக டிப்பர் லாரி வேகமாக வந்தது. எதிர்பாராதவிதமாக லாரியும்-மோட்டார் சைக்கிளும் நேருக்குநேர் மோதின. இதில் கவியரசன் லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்.
இதையடுத்து போலீசார் கவியரசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து சப்-இன்ஸ்பெக்டர் ராஜவேலு விசாரணை நடத்தி, லாரி டிரைவர் தத்தனூரை சேர்ந்த கொளஞ்சியப்பன் (40) என்பவரை கைது செய்தார். விபத்தில் பலியான கவியரசனுக்கு கவிதா என்ற மனைவியும் ஒரு வயதில் மகனும்உள்ளனர். கவியரசன் பலியான சம்பவம் அவரது உறவினர்கள் மற்றும் தே.மு.தி.க. கட்சியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.