செய்திகள்
கொலை

செந்துறை அருகே பெண் அடித்து கொலையா? கணவரை கைது செய்து போலீசார் விசாரணை

Published On 2019-11-18 15:07 GMT   |   Update On 2019-11-18 15:07 GMT
செந்துறை அருகே பெண் அடித்துக் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் அவரது கணவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செந்துறை:

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள மருவத்தூர் கிராமத்தை சேர்ந்த ராதா மகன் பிரபாகரன்(வயது 27). இவர் தமிழ்நாடு மின்வாரிய அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், செந்துறை அருகே உள்ள பொன்பரப்பி அய்யனார் குலத்துபட்டியை சேர்ந்த ஊமதுரை மகள் கார்த்திகாவிற்கும்(23) கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்றது. கடந்த சில மாதங்களாக கணவன்- மனைவிக்கு இடையே குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் கார்த்திகா பொன்பரப்பியில் உள்ள தனது உறவினர் திருமணத்திற்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்துள்ளனர். அன்று இரவு கணவன்-மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் நேற்று காலை பிரபாகரன், கார்த்திகாவின் உறவினர்களிடம் கார்த்திகா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் தெரிவித்தார். அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு கார்த்திகாவின் உறவினர்களும், செந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையில் போலீசாரும் விரைந்து வந்தனர். அப்போது கார்த்திகாவின் உறவினர்கள் சிலர் பிரபாகரன் தான் கார்த்திகாவை அடித்துக் கொலை செய்து விட்டதாக கூறி ஆத்திரத்தில் அவரது வீட்டை அடித்து உடைத்தனர். இதனைக் கண்ட போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். மேலும் கார்த்திகாவின் உடலை பொன்பரப்பிக்கு எடுத்து செல்வதாக கூறி வீட்டில் இருந்த அவரது உடலை உறவினர்கள் தூக்கிக்கொண்டு சரக்கு வேனில் ஏற்றினர். இதனை கண்ட போலீசார் உடலை எடுத்து செல்ல விடாமல் தடுத்தனர். இதனால் போலீசாருக்கும், உறவினர்களுக்கும் இடையே சிறிது நேரம் தள்ளு-முள்ளு ஏற்பட்டது.

அதனை தொடர்ந்து போலீசார் சரக்கு வேனில் இருந்து உடலை இறக்கி மீண்டும் வீட்டிலேயே வைத்தனர். பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் கார்த்திகாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பிரபாகரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உறவினர்களிடையே ஏற்பட்ட இந்த மோதலை தொடர்ந்து அப்பகுதியில் அரியலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு திருமேனி தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Tags:    

Similar News