செய்திகள்
செயின் பறிப்பு

நெட்டப்பாக்கம் அருகே தனியார் நிறுவன ஊழியரை தாக்கி செயின் பறிப்பு

Published On 2019-10-13 14:15 GMT   |   Update On 2019-10-13 14:15 GMT
நெட்டப்பாக்கம் அருகே தனியார் நிறுவன ஊழியரிடம் தங்க செயின் பறித்த வாலிபரை பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
சேதராப்பட்டு:

நெட்டப்பாக்கம் அருகே ஏரிப்பாக்கம் பழைய காலனி பள்ளத் தெருவை சேர்ந்தவர் நாகமுத்து (வயது 28). இவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இரவு 8 மணியளவில் நாகமுத்து அப்பகுதியில் நின்று கொண்டிருந்தார். 

அப்போது அதே பகுதியை சேர்ந்த அரவிந்தன் (19) மற்றும் புகழ் என்ற புகழேந்தி (20) ஆகியோர் நாகமுத்துவை தாக்கி அவர் கழுத்தில் அணிந்திருந்த தங்க செயினை பறித்தனர். அப்போது நாகமுத்துவுக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த நாகமுத்து அலறினார். இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்தனர். அவர்கள் செயினை பறித்த 2 வாலிபர்களை பிடிக்க விரட்டி சென்றனர். அதில் அரவிந்தன் மட்டும் சிக்கினான். புகழேந்தி தப்பி ஓடிவிட்டான். இதையடுத்து அரவிந்தனை நெட்டப்பாக்கம் போலீசில் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து நாகமுத்து நெட்டப்பாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விபல் குமார் வழக்குபதிவு செய்து அரவிந்தனை கைது செய்தார். மேலும் தப்பி ஓடிய புகழேந்தியை தேடி வருகிறார். கைது செய்யப்பட்ட அரவிந்தன் மற்றும் போலீசாரால் தேடப்படும் புகழேந்தி ஆகியோர் மீது ஏற்கனவே வீடு புகுந்து திருட்டு மற்றும் தாக்கி வழிப்பறி செய்த வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News