செய்திகள்
மரணம்

டி.என்.பாளையம் அருகே குளத்தில் மூழ்கி ஆடு மேய்க்கும் தொழிலாளி பலி

Published On 2019-09-28 15:20 IST   |   Update On 2019-09-28 15:20:00 IST
ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அருகே குளத்தில் மூழ்கி ஆடு மேய்க்கும் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
டி.என்.பாளையம்:

நஞ்சை புளியம்பட்டி சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது44). இவர் பல ஊர்களுக்கு சென்று பட்டி போட்டு அப்பகுதிலேயே ஆடுகள் மேய்க்கும் தொழில் செய்து வந்துள்ளார்.

சம்பவத்தன்று மதியம் சுமார் 2 மணியளவில் டி.என்.பாளையம் அடுத்த பெருமுகை சஞ்சீவராயன் கோவில் வனத்தை ஒட்டிய பகுதியில் பழனிச்சாமி ஆடுகளை மேய்ந்து கொண்டிருந்தார்.

ஆடுகளை மேய்த்து விட்டு அருகில் இருக்கும் சஞ்சீவிராயன் குளத்தில் குளிக்க சென்ற பழனிச்சாமி குளத்தின் ஆழமான பகுதிக்கு சென்றதாக சொல்லப்படுகிறது.

இவருக்கு நீச்சல் தெரியாததால் சிறிது நேரத்தில் நீரில் மூழ்கினார். அந்த வழியாக வந்தவர்கள் சம்பவத்தை பார்த்து போலீஸ் மற்றும் தீயணைப்புதுறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கோபி தீயணைப்புதுறையினர் பழனிசாமி உடலை மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்துள்ளனர்.

இது குறித்து பங்களாபுதூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Similar News