ஈரோடு மாவட்டம் முழுவதும் தொடர்ந்து மழை- மின்தடையால் மக்கள் அவதி
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வந்தது.
இதைத்தொடர்ந்து நேற்று மாலை ஈரோட்டில் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இதை அடுத்து மழை பெய்ய தொடங்கியது. நேற்று மாலை தொடங்கிய மழை இரவு வரை கொட்டி தீர்த்தது. ஒரு சில இடங்களில் சாரல் மழையும், ஒரு சில இடங்களில் பலத்த மழையும் கொட்டியது.
மேலும் மாவட்டத்தில் கோபி, சத்தியமங்கலம், பவானி, பெருந்துறை, கவுந்தபாடி உள்பட பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் கூடி வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மழையையொட்டி ஈரோடு கொல்லம் பாளையம், ஆணைக்கல் பாளையம், 46 புதூர், சோலார், லக்காபுரம் உள்பட பல்வேறு இடங்களில் மின்சாரம் தடைபட்டது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
கவுந்தப்பாடி சுற்று வட்டாரத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. மழைவெள்ளம் ஆறாக சாலையில் ஓடியது. கடந்த ஒருவாரமாக கவுந்தப்பாடி சுற்றுவட்டாரத்தில் விட்டு விட்டு மழை பெய்து வந்தது.
இரவு நேரங்களில் விடிய விடிய சாரல் மழை பெய்தது. கீழ்பவானி பாசனத்திட்டத்தில் விவசாயிகள் நாற்றங்கள் அமைத்து விதை நெல் விட்டு வருகிறார்கள். தொடர்ந்து பெய்து வரும் மழையால் விவசாயிகள் உழவு போடும் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார்கள்.
வயலை பதப்படுத்தி வரப்பமைத்து நாற்று நடுவதற்கு ஏற்ற வகையில் அமைக்கும் பணி நடந்து வருகிறது. மழையால் இந்த பணிகளை செய்ய ஏற்றதாயுள்ளது.
கவுந்தப்பாடியில் கொட்டிதீர்த்த மழையால் மழைவெள்ளம் ஆறாக சாலையின் இருபுறத்தையும் தொட்ட படி மழை வெள்ளம் சென்றது. வாகனங்கள் மழை வெள்ளத்தில் மிதந்து சென்றது. இருசக்கர வாகனங்கள் மழை நீரில் சென்றதால் மழை தண்ணீர் எஞ்ஜனில் புகுந்ததால் பழுதாகி நின்றது.
இரு சக்கர வாகனங்களை ஓட்டிவந்தவர்கள் மழைநீரில் வண்டியை தள்ளிக்கொண்டு சென்றனர். இதனால் 2 மணிநேரம் மின்தடை ஏற்றபட்டது. மழைக்கு பின் குளிந்த காற்று வீசியது.
ஈரோடு மாவட்டத்தில் நேற்று பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-
ஈரோடு-36
பவானி-16.2
கொடுமுடி-15.8
கவுந்தப்பாடி-75.2
எலந்தகுட்டைமேடு-33.2
கொடிவேரி-31.2
வரட்டுபள்ளம்-4.2
குண்டேரிபள்ளம்-3