ஈரோட்டில் மின்சாரம் தாக்கி பெண் - எலக்ட்ரீசியன் பலி
ஈரோடு:
ஈரோடு, சூரம்பட்டி, பாரதிபுரம் பகுதியை சேர்ந்தவர் ரவிக்குமார். இவரது மனைவி ராணி (வயது 50).
நேற்று இரவு ராணி அரிசி மாவு அரைப்பதற்காக கிரைண்டரை இயக்கிக் கொண்டிருந்தார். அப்போது அவர் அருகே அவரது பேரன் ஜெயபிரகாஷ் ( வயது 6) நின்று கொண்டு இருந்தான்.
ராணி கிரைண்டரை தொட்ட போது திடீரென அவரை மின்சாரம் தாக்கியது. அவருடன் நின்று கொண்டிருந்த பேரன் ஜெயப்பிரகாசையும் மின்சாரம் தாக்கியது. இதில் இருவரும் மயக்கமடைந்து கீழே விழுந்து கிடந்தனர்.
வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு வந்த ரவிக்குமார் தனது மனைவியும் பேரனும் கிரைண்டர் அருகே சுயநினைவின்றி விழுந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கிரைண்டரில் அரிசி அரை பட்ட நிலையில் ஓடாமல் நின்று இருந்தது . சந்தேகப்பட்டு ரவிக்குமார் கிரைண்டரை தொட்ட போது சாக்கடித்தது தெரியவந்தது.
இதையடுத்து இருவரையும் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அவர்களை பரிசோதித்த டாக்டர் ராணி வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தார். ஜெயபிரகாசுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதைப்போன்று அவல்பூந்துறையை சேர்ந்த எலக்ட்ரீசியன் மின்சாரம் தாக்கி இறந்தார். இது பற்றிய சம்பவம் வருமாறு:-
ஈரோடு அடுத்த அவல்பூந்துறை பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன் (வயது 38) .எலக்ட்ரீசியன்.
தியாகராஜன் நேற்று மாலை கள்ளுக்கடை மேடு சீனிவாசா வீதியில் ஒரு வீட்டில் எலக்ட்ரீசன் வேலை செய்து கொண்டிருந்தார்.
தியாகராஜன் மோட்டார் கம்ப்ரசரை ரிப்பேர் சரி செய்ய வேண்டி சுவிட்சை போட்டுவிட்டு மோட்டாரில் உள்ள வால்வு அடைப்பதற்காக கையை வைக்கும் போது மோட்டாரை தொட்ட போது அவர் மீது மின்சாரம் தாக்கியது. இதில் தியாகராஜன் கீழே மயங்கி விழுந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்தவர்கள் தியாகராஜனை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் வழியிலேயே தேவராஜன் இறந்துவிட்டதாக தெரிவித்தார்.
இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஈரோட்டில் மின்சாரம் தாக்கி ஒரே நாளில் பெண் உள்பட 2 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.