செய்திகள்
காதல் ஜோடி

மெக்கானிக்கை காதலித்து கரம் பிடித்த பட்டதாரி பெண்

Published On 2019-09-17 11:02 GMT   |   Update On 2019-09-17 11:02 GMT
பவானி அருகே மெக்கானிக்கை காதலித்து கரம் பிடித்த பட்டதாரி பெண்ணை பெற்றோர் ஏற்காததால் காதலனின் பெற்றோரிடம் சென்றார்.

பவானி:

பவானி அருகே உள்ள சன்னியாசிபட்டி விநாயகர் கோவில் வீதியை சேர்ந்த வையாபுரி என்பவரின் மகன் சக்திவேல் (வயது 29).

சக்திவேல் இரு சக்கர வாகன மெக்கானிக்காக பணி புரிந்து வருகிறார். கல்பாவி மேல்கட்டிய கவுண்ட னூர் பகுதியை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவரது மகள் கிருத்திகா (20).

கிருத்திகா நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம். சி.ஏ. படித்து முடித்துள்ளார். இவருக்கும் மெக்கானிக் சக்திவேலுக்கும் காதல் அரும்பியது.

இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் தங்களது காதலுக்கு இருவர் வீட்டிலும் பச்சை கொடி காட்டுவார்கள் என எண்ணினர்.

இதில் காதலன் வீட்டில் எதிர் பார்த்தது போல் பச்சை கொடி காட்டினர். ஆனால் பெண் வீட்டிலோ சிகப்பு கொடி தூக்கினர். கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

எனினும் காதலர்கள் காதலை கைவிடவில்லை. இருவரும் வீட்டை விட்டு வெளியேறினர்.

பிறகு காதல் ஜோடி கோவை அருகே உள்ள மருதமலை முருகன் கோவிலுக்கு சென்று அங்கு மாலை மாற்றி தாலி கட்டி திருமணம் செய்து கொண்டனர். பிறகு காதல் தம்பதியினர் பவானி அனைத்து மகளிர் போலீசில் தஞ்சம் அடைந்தனர். பாதுகாப்பு கேட்டு மனுவும் கொடுத்தனர்.

இன்ஸ்பெக்டர் வினோதினி இருவரது பெற்றோரையும் பேச்சு வார்த்தை நடத்த வரவழைத்தார். இதில் பட்டதாரி பெண் கிருத்திகாவின் பெற்றோர் இந்த காதல் திருமணத்துக்கு சம்மதிக்கவே இல்லை. இதை ஏற்று கொள்ளவே மாட்டோம் என கூறினர்.

இதனால் போலீசார் காதல் தம்பதியை மணமகன் வீட்டில் ஒப்படைத்தனர். பெற்றோரை பிரிந்து கிருத்திகா தனது காதலனின் பெற்றோரிடம் சென்றார்.

Tags:    

Similar News