செய்திகள்
கந்துவட்டி கொடுமை குறித்து மனு கொடுத்த பாலகிருஷ்ணன் மற்றும் அவரது மனைவி லோகம்மாள்

ரூ.1 லட்சம் பணத்துக்கு 15 லட்ச ரூபாய் கந்து வட்டி கேட்கிறார்கள் - கணவன்-மனைவி புகார்

Published On 2019-09-09 15:23 IST   |   Update On 2019-09-09 15:23:00 IST
ஈரோடு அருகே ரூ.1 லட்சம் பணத்துக்கு 15 லட்ச ரூபாய் கந்து வட்டி கேட்பதாக கலெக்டரிடம் கணவன் மனைவி புகார் அளித்துள்ளனர்.
ஈரோடு:

ஈரோடு அடுத்த வெள்ளோடு பாலாஜி கார்டன் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்.

இவரது மனைவி லோகம்மாள். இருவரும் டெய்லர் வேலை பார்கிறார்கள்.

சென்னிமலை பகுதியை சேர்ந்த ஒரு பைனான்சியரிடம் இவர்கள் முதலில் ரூ.70 ஆயிரம் கடன் வாங்கினார்கள். பிறகு மேலும் அவரிடம் தம்பதியினர் ரூ.45 ஆயிரம் கடன் வாங்கினார்கள்.

மொத்தம் ரூ.1.15 லட்சம் கடன் வாங்கி உள்ளனர். இந்த பணத்துக்கு வட்டியாக மட்டும் மாதம் தோறும் இதுவரை 16 மாதமாக வட்டி மட்டும் மாதம் தோறும் ரூ.12,500 கொடுத்துள்ளார்கள்.

இந்த நிலையில் அந்த பைனான்சியர் “நீங்கள் வாங்கிய கடனுக்கு வட்டி கந்து வட்டி என 15 லட்ச ரூபாய் கொடுக்க வேண்டும்’’ என்று கூறினாராம்.

இதை கேட்டு கணவனும் மனைவியும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். 1.15 லட்சம் வாங்கியதற்கு வட்டி மட்டும் 2 லட்சம் கொடுத்து விட்டோம். இது போக அசல் வட்டி கந்து வட்டி என மேலும் 15 லட்சம் கொடுக்க வேண்டுமா...? என கேட்டனர்.

அதற்கு அந்த பைனான்சியர் பணம் கொடுத்தே ஆக வேண்டும் என்று கூறி கொலை மிரட்டலும் விடுத்தாராம். மேலும் வெற்று பேப்பரில் கையெழுத்து வாங்கியதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறை கேட்பு முகாமில் கலந்து கொண்ட பாலகிருஷ்ணன்-லோகம்மாள் தம்பதியினர் கலந்து கொண்டு கலெக்டர் கதிரவனிடம் மனு கொடுத்தனர்.

அதில் ரூ.1.25 லட்ச கடனுக்கு இதுவரை 2 லட்சம் வட்டி கொடுத்துவிட்டோம். இப்போது மேலும் ரூ.15 லட்சம் கேட்கிறார்கள். பணம் கொடுக்காவிட்டால் கொன்றுவிடுவோம் என மிரட்டல் விடுக்கிறார்கள் எங்கள் உயிருக்கும் உடமைக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.

Similar News