செய்திகள்
அரச்சலூர் அருகே கடைக்கு சென்று திரும்பியவர் பாம்பு கடித்து பலி
அரச்சலூர் அருகே கடைக்கு சென்று திரும்பியவரை பாம்பு கடித்ததில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஈரோடு:
ஈரோடு அடுத்த அரச்சலூர் ராட்டை சுற்றிபாளையம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது65). கூலி தொழிலாளி. சம்பவத்தன்று கோவிந்த ராஜ் கடைக்கு சென்று விட்டு வருவதாக கூறிவிட்டு சென்றார். ராட்டை சுற்றிபாளையம் மாகாளியம்மன் கோவில் அருகே வந்தபோது கோவிந்தராஜ் காலில் பாம்பு ஒன்று கடித்துள்ளது. இரவு நேரம் என்பதால் என்ன பாம்பு கடித்தது? என்று அவருக்கு சரியாக தெரியவில்லை.
பின்னர் வீட்டுக்கு வந்த கோவிந்தராஜ் நடந்த சம்பவத்தை கூறினார். இதையடுத்து அவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி கோவிந்தராஜ் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து அரச்சலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.