செய்திகள்
காதல் ஜோடி

ஈரோடு போலீசில் தஞ்சம் அடைந்த காதல் ஜோடி: பெற்றோரை வரவழைத்ததும் சொல்லாமல் ஓட்டம்

Published On 2019-09-03 16:53 GMT   |   Update On 2019-09-03 16:53 GMT
வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு ஈரோடு போலீசில் தஞ்சம் அடைந்தனர். பெற்றோரை வரவழைத்ததும் சொல்லாமல் ஓட்டம் பிடித்துள்ளனர்.

ஈரோடு:

வெள்ளகோவில் பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன். அதே பகுதியை சேர்ந்தவர் அபிராமி (19). இருவரும் காதலித்து வந்தனர். இவர்களின் காதலுக்கு பலத்த எதிர்ப்பு ஏற்பட்டது. இதனால் காதலர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறினர். பவானி கூடுதுறைக்கு வந்த காதல் ஜோடி அங்கு மாலை மாற்றி கொண்டு தாலி கட்டி திருமணம் செய்து கொண்டனர்.

பிறகு காதல் தம்பதியினர் தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என கேட்டு ஈரோடு மகளிர் போலீசில் தஞ்சம் அடைந்தனர். போலீசார் அவர்களின் மனுவை பெற்று இருவர் வீட்டு பெற்றோர்கள், உறவினர்களையும் சமரசம் செய்ய அழைத்தனர்.

இது காதல் தம்பதிக்கு கலக்கத்தை ஏற்படுத்தியது. நம்மை பிரித்து விடுவார்களோ... என பயந்தனர். இதனால் காதல் ஜோடியினர் யாரிடமும் சொல்லாமல் போலீஸ் நிலையத்தில் இருந்து வெளியேறி சென்று விட்டனர்.

இந்த நிலையில் இருவரது பெற்றோர். உறவினர்கள் வர காதல் ஜோடி இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.பிறகு இரு தரப்பினரும் தங்களது பிள்ளையை காணவில்லை. மீட்டு தாருங்கள் என்று கூறி சென்றனர்.

இந்த சம்பவம் மகளிர் போலீஸ் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

Similar News