செய்திகள்
கைது

வடலூர் அருகே, நர்சு தூக்குப்போட்டு தற்கொலை - கணவர் கைது

Published On 2019-08-28 16:48 GMT   |   Update On 2019-08-28 16:48 GMT
வடலூர் அருகே நர்சு தூக்குப்போட்டு இறந்தார். தற்கொலைக்கு தூண்டியதாக அவருடைய கணவரை போலீசார் கைது செய்தனர்.
குறிஞ்சிப்பாடி:

வடலூர் அருகே உள்ள குண்டியமல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் ராகுல்ராஜன். இவரது மனைவி செந்தமிழ்செல்வி(வயது 29). இவர் அதே பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சாக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் ராகுல்ராஜன் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். மேலும் செந்தமிழ்செல்வியிடம் சம்பள பணத்தை தனது தாயிடம் கொடுக்குமாறு அவர் வற்புறுத்தி வந்துள்ளார்.

இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் செந்தமிழ்செல்வியிடம் சம்பள பணத்தை தருமாறு ராகுல்ராஜன் கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த ராகுல்ராஜன், செந்தமிழ்செல்வியை திட்டியுள்ளார். இதில் மனமுடைந்த அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்த தகவலின் பேரில் குறிஞ்சிப்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷியாம்சுந்தர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, செந்தமிழ்செல்வியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து இறந்த செந்தமிழ்செல்வியின் தாய் செண்பகவள்ளி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார், மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து ராகுல்ராஜனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
Tags:    

Similar News