செய்திகள்
விருத்தாசலத்தில் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

கடலூர் மாவட்டத்தில் பலத்த மழை

Published On 2019-07-16 06:41 GMT   |   Update On 2019-07-16 06:41 GMT
கடலூர் மாவட்டத்தில் மழை பெய்த பகுதிகளில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான நிலை உருவானது. இதனால் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.
கடலூர்:

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகின்றது.

கடலூர் மாவட்டத்தில் நேற்று மாலை விருத்தாசலம் பகுதியில் கருமேகங்கள் சூழ்ந்தன. பின்னர் குளிர்ந்த காற்று வீசியது. இதையடுத்து திடீரென 7.30 மணி முதல் 8.30 மணி வரை பலத்த மழை பெய்தது. இந்த மழையினால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். மேலும் தாழ்வான பகுதியிகளில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது. இந்த மழையினால் குறுவை சாகுபடி செய்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

புவனகிரி, கீரப்பாளையம், எருமாத்தூர் பகுதிகளில் நேற்று இரவு 7.15 மணிமுதல் 8.15 மணி வரை லேசான சாரல் மழைபெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது.

நெய்வேலி, செருத்தான்குப்பம், திடீர்குப்பம், இந்திரா நகர், வடக்கு மேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை பலத்த காற்று வீசியது. இதனையடுத்து 7 மணிக்கு சாரல் மழை பெய்தது. இதனால் அந்த பகுதிகளில் குளிர்ச்சியான நிலை உருவானது.

பென்னாடம், திட்டக்குடி, ஆவினங்குடி, எறையனூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு 7 மணிமுதல் இரவு 8.30 மணிவரை மழை பெய்தது. இந்த மழையால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. சாலையின் பள்ளமான பகுதியில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது.

மழை பெய்த பகுதிகளில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான நிலை உருவானது. இதனால் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.



Tags:    

Similar News