செய்திகள்
பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தை அதிகாரிகள் பார்வையிட்ட காட்சி.

வாணியம்பாடியில் 3 கிலோ தங்கம் பறிமுதல்

Published On 2019-07-13 18:23 GMT   |   Update On 2019-07-13 18:23 GMT
வாணியம்பாடியில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் 3 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
வாணியம்பாடி:

வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தல் ஆகஸ்டு மாதம் 5-ந் தேதி நடக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தன. இதையடுத்து பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி வாணியம்பாடியில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா மற்றும் வாகனங்களில் பணம் எடுத்து செல்லப்படுகிறதா? என்பதை கண்காணிக்க 3 குழுக்கள் அமைத்து வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் வாணியம்பாடி காதர்பேட்டை பகுதியில் வாணியம்பாடி தேர்தல் நடத்தும் அலுவலர் லூர்துசாமி தலைமையில் பறக்கும்படை அதிகாரி முருகதாஸ் மற்றும் குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஆம்பூர் பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவரின் காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் உரிய ஆவணம் இல்லாமல் 3 கிலோ தங்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடம் கேட்டபோது, அவர் நகை செய்பவர் என்பதும், நகைகளை செய்வதற்காக தங்கம் கொண்டு சென்றதாகவும் தெரிவித்தார்.

ஆனால் உரிய ஆவணங்கள் இல்லாததால் 3 கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து வாணியம்பாடி சார்நிலை கருவூலத்தில் ஒப்படைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு சுமார் ரூ.90 லட்சம் ஆகும்.
Tags:    

Similar News