நெல்லிக்குப்பம் அருகே பள்ளத்தில் கார் கவிழ்ந்தது- அ.தி.மு.க முன்னாள் கவுன்சிலர் பலி
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 48). அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர். இன்று காலை அவர் பண்ருட்டியில் இருந்து கடலூருக்கு காரில் புறப்பட்டார். காரை அவரே ஓட்டினார்.
நெல்லிக்குப்பத்தை அடுத்த மருதாடு கஸ்டம்ஸ் சாலையில் கார் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென கார் தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் ரமேஷ் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
அந்த பகுதியில் இருந்தவர்கள் இந்த விபத்து குறித்து மருதாடு சோதனை சாவடிக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் ரமேசை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு ரமேசை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறினர்.
இந்த விபத்து குறித்து நெல்லிக்குப்பம் போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரை அடுத்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.