செய்திகள்
அத்திவரதரை தரிசனம் செய்தார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
சென்னை வந்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று மதியம் காஞ்சிபுரம் வந்து, அங்கு அத்தி வரதரை தரிசனம் செய்தார். அவரது வருகையையொட்டி சில மணி நேரங்களுக்கு பொது தரிசனம் ரத்து செய்யப்பட்டது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் அத்திவரதர் கடந்த 1-ந் தேதி முதல் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். நேற்று 11-வது நாளாக அத்திவரதர் காவி நிற பட்டாடையில் பக்தர்களுக்கு காட்சி தந்தார். பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
இதற்கிடையே, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று மதியம் 3 மணி அளவில் அத்திவரதரை தரிசனம் செய்ய காஞ்சிபுரம் வருகிறார் என தெரிவிக்கபட்டு இருந்தது. அவரது வருகையையொட்டி, காஞ்சிபுரத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், இன்று மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை பொது தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அத்திவரதரை தரிசிக்க டெல்லியிலிருந்து இன்று சென்னை வந்தார். அவரை விமான நிலையத்தில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் ஆளுநர் வரவேற்றனர்.
சென்னையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் காஞ்சிபுரம் சென்ற ராம்நாத் கோவிந்த், பிற்பகலில் அத்திவரதரை தரிசத்தார். இதனையடுத்து காஞ்சிபுரத்தில் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மேலும் கோவிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டன.