செய்திகள்
கைது (கோப்பு படம்)

போலீஸ் போல் நடித்து ரூ.3½ கோடி கொள்ளை - கேரளாவை சேர்ந்த 3 பேர் கைது

Published On 2019-07-10 21:55 IST   |   Update On 2019-07-10 21:55:00 IST
பெருந்துறையை அடுத்துள்ள விஜயமங்கலம் அருகே போலீசார் போல் நடித்து நகைக்கடை உரிமையாளர்களிடமிருந்து 3½ கோடி ரூபாயை கொள்ளையடித்து சென்றவர்களை பெருந்துறை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
பெருந்துறை:

கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், பூத்தானங்கடியை சேர்ந்த முகமது என்பவரது மகன் அன்வர் சதர்த்(38). இவர் சென்னை, கோவை ஆகிய பகுதிகளில் நகைக்கடை வைத்து நடத்தி வருகிறார்.

இவர் கடந்த ஏப்ரல் மாதம் தனது காரில் டிரைவர்கள் சிகாப், முனீர் மற்றும் நிசாத் ஆகியோர் மூலமாக 3½ கோடி பணத்தை சென்னை பாரிஸ் கார்னரில் இருந்து தனது சொந்த ஊரான கேரளாவுக்கு கொண்டு செல்ல கொடுத்து விட்டுள்ளார்.

இந்த டிரைவர்கள் மூவரும் காரில் ஏப்ரல் 4-ம் தேதி அதிகாலை 4 மணியளவில் பெருந்துறையை அடுத்துள்ள விஜயமங்கலம் டோல்கேட் அருகே வந்த போது அங்கு இரண்டு காரில் போலீஸ் உடையில் வந்த மர்ம நபர்கள் அந்த காரை நிறுத்தி சோதனை செய்ய வேண்டும் என கூறி காரை சோதனை செய்வது போல் நடித்து டிரைவர்கள் மூவரையும் கைவிலங்கிட்டு சற்று தொலைவில் இறக்கி விட்டு விட்டு அந்த காரை கடத்தி கொண்டு அங்கிருந்து சென்று விட்டனர்.

இந்த சம்பவம் குறித்து டிரைவர்கள் கொடுத்த தகவலின் பேரில் பெருந்துறை போலீசில் அன்வர் சதர்த் புகார் கொடுத்தார். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதனை கண்டுபிடிக்க பெருந்துறை டிஎஸ்பி ராஜாகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

நேற்று முன்தினம் விஜயமங்கலம் டோல்கேட் அருகே பெருந்துறை, போலீசார் மேற்கொண்ட வாகன சோதனையில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த கார்களில் வந்த 3 பேரை நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர்.

அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறவே அவர்களிடம் மேலும் தனிப்படை போலீசார் மேற்கொண்ட விசரணையில் கடந்த 4-ம் தேதி காரில் வந்த டிரைவர்களிடமிருந்த இருந்த 3½ கோடி பணத்தை கொள்ளை அடித்ததாகவும் கொள்ளையடித்த பணத்தினை தங்களுக்குள் பங்கு போட்டுக் கொண்டதாகவும் கூறினார்கள்.

இதனை தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் கைது செய்த போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அவர்கள் கேரள மாநிலம் எர்ணாகுளம், செம்புமுக்கு பகுதியை சேர்ந்த ஜோபி தாமஸ் (39), கோழிக்கோடு செலவூர் பகுதியை சார்ந்த முரளிதரன்,(35) மற்றும் அலியார் (48)என்றும் தெரிந்தது.

மூவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து ரூபாய் 31 லட்சம் ரொக்கம் மற்றும் மூன்று சொகுசு கார், ஒரு புல்லட் ,ஆகியவற்றையும் பறிமுதல் செய்து பெருந்துறை கோர்ட்டில் ஒப்படைத்தனர். வழக்கினை விசாரித்த நீதிபதி அவர்கள் 3 பேரையும், 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.

அதன் பேரில் அவர்கள் 3 பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 8 பேரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

Similar News