செய்திகள்
மான் (கோப்பு படம்)

சென்னிமலை அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்து 2 மான்கள் பலி - தண்ணீர் தேடி வந்த போது பரிதாபம்

Published On 2019-07-06 19:41 IST   |   Update On 2019-07-06 19:41:00 IST
சென்னிமலை அருகே தண்ணீர் தேடி வந்த மான்கள் கிணற்றில் விழுந்தது. இதில் 2 புள்ளி மான்கள் உயிரிழந்தது. மற்றொரு குட்டி மானை வனத்துறையினர் மீட்டு கால்நடை மருத்துவரிடம் ஒப்படைத்தனர்.
சென்னிமலை:

சென்னிமலை அருகே வனப்பகுதிகளில் நூற்றுக்கணக்கான மான்கள் சுற்றி வருகிறது. தற்போது கோடைகாலம் என்பதால் அவற்றிற்கு வனத்துறையினர் ஆங்காங்கே தண்ணீர் தொட்டி வைத்து தண்ணீர் ஊற்றி வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்று சென்னிமலை அருகே ஈங்கூரிலிருந்து சிப்காட் செல்லும் வழியில் காந்தி நகர் என்ற இடத்தில் கெட்டிமுத்து என்பவருக்கு சொந்தமான கிணற்றிற்கு 2 பெண் மான்கள் 1 பெண் குட்டி மானுடன் தண்ணீர் தேடி வந்தது.

அப்போது எதிர்பாராத விதமாக 3 மான்களும் கிணற்றுக்குள் தவறி விழுந்தது. அந்த கிணற்றில் தண்ணீர் இல்லாததால் பலத்த அடிபட்டு இரண்டு மான்கள் இறந்துவிட்டது. குட்டி மான் மட்டும் கத்தியபடி இருந்துள்ளது.

உடனடியாக அந்தப் பகுதியில் இருந்தவர்கள் சென்னிமலை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

சென்னிமலை போலீசார் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். ஈரோடு வனச்சரக அலுவலர் ரவீந்திரநாத் உத்தரவின்பேரில் வனவர் விஜயகுமார் வனக்காப்பாளர்கள் நாகராஜ், தேவராஜ், விஜயகுமார் ஆகியோர் விரைந்து சென்று பார்த்த போது இரண்டு மான்கள் இறந்து கிடந்தது.

ஒரு குட்டிமான் மட்டும் உயிருடன் இருந்தது. அந்த மானை மீட்டு ஈங்கூர் கால்நடை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். கிணற்றில் விழுந்த 3 மான்களும் பெண் மான்கள் ஆகும்.

Similar News