செய்திகள்
லாரி டிரைவர் தற்கொலை முயற்சி

மனைவி கள்ளக்காதலனுடன் ஓட்டம்? லாரி டிரைவர் தற்கொலை முயற்சி

Published On 2019-07-01 22:32 IST   |   Update On 2019-07-01 22:32:00 IST
சேலம் அருகே மனைவி கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்ததாக கூறி, லாரி டிரைவர் விஷம் குடித்தார்.
கருப்பூர்:

சேலம் அருகே மனைவி கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்ததாக கூறி, லாரி டிரைவர் விஷம் குடித்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

சேலம் கருப்பூர் அருகே உள்ள உப்புகிணறு பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் ஒருவர், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு குமாரபாளையம் அருகே உள்ள சாணார்பாளையம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து திருமணம் செய்தார். இந்த காதல் தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் அந்த பெண் தனது தோழியிடம் ரூ.35 ஆயிரம் கடன் வாங்கி உள்ளார். அந்த தோழியின் மூலம் அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் அவருக்கு அறிமுகம் ஆகி பழகி உள்ளார்.

அதேநேரத்தில் லாரி டிரைவரின் மனைவிக்கும், அந்த இளைஞருக்கும் கள்ளத்தொடர்பு உள்ளதாகவும், அதை கைவிட்டு தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு லாரி டிரைவர் தனது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதில் ஆத்திரம் அடைந்த அந்த பெண், தனது நடத்தையில் சந்தேகப்பட்டு கணவர் தகராறில் ஈடுபட்டதுடன் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும் கூறி கருப்பூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கணவன், மனைவி இருவரையும் அழைத்து பேசி சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அந்த லாரி டிரைவர் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். பின்னர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் குறித்து கருப்பூர் போலீசார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் அந்த லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் அளித்த வாக்குமூலத்தில், எனது குழந்தைகளை விட்டு, விட்டு எனது மனைவி கள்ளக்காதலனுடன் சென்று விட்டதால் மனம் உடைந்து தற்கொலைக்கு முயன்றதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். அதன்பேரில் கருப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News