கடலூர் கலெக்டர் முன்பு பிளேடால் கழுத்தை அறுத்த பெண்- ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
கடலூர்:
கடலூரை அடுத்த திருவந்திபுரத்தை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மனைவி அமுதா (வயது 40). இவர் இன்று காலை குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு கொடுக்க வந்தார்.
பின்பு அவர் வரிசையில் நின்று உள்ளே சென்றார். அப்போது அங்கு இருந்த கலெக்டர் அன்புச்செல்வன் மற்றும் மாவட்ட அதிகாரி முன்னிலையில் அமுதா திடீரென்று தான் மறைத்து வைத்திருந்த பிளேடால் தனது கழுத்தை அறுத்தார். அவரது கழுத்தில் இருந்து ரத்தம் வழிந்தது.
இதைப்பார்த்ததும் கலெக்டர் அன்புச்செல்வன் மற்றும் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அங்கு ஓடி வந்தனர். அமுதா பிளேடால் கழுத்தை அறுத்ததை தடுத்து நிறுத்தினர்.
உடனே அமுதாவிடம் கலெக்டர் அன்புச்செல்வன், ஏன் கழுத்தை அறுத்து கொண்டீர்கள்? என்று கேட்டார். அப்போது அவர் கண்ணீர் மல்க கூறியதாவது:-
எனது கணவர் சீனிவாசன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். எனக்கு 2 மகள்கள் உள்ளனர். எனது கணவர் இறந்த பின்னர் அவருடைய உறவினர்கள் எங்களை ஏமாற்றி, எங்களுக்கு கிடைக்க வேண்டிய சொத்தை அபகரித்து கொண்டனர்.
இதனால் எங்களுக்கு வீடு உள்ளிட்ட எதுவும் இல்லை. நாங்கள் நடுதெருவில் நிற்கக்கூடிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இது குறித்து பலமுறை கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளேன். ஆனால், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் மனவேதனை அடைந்தேன். இப்படி கஷ்டப்படுவதை விட உயிரை மாய்த்து கொள்ளலாம் என முடிவு செய்து பிளேடால் எனது கழுத்தை அறுத்து கொண்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதனை தொடர்ந்து அமுதாவுக்கு கலெக்டர் அன்புச்செல்வன் அறிவுரை கூறினார். மேலும் இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்கிறேன் என்றும் உறுதி கூறினார்.
பிளேடால் கழுத்தை அறுத்து கொண்ட அமுதாவை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லுமாறு போலீசாரிடம் கலெக்டர் தெரிவித்தார். உடனே அங்கிருந்த போலீசார், அமுதாவை கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் கலெக்டர் முன்பு மனு கொடுக்க வந்த பெண் தன்னைத்தானே பிளேடால் கழுத்தை அறுத்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.