செய்திகள்
கைது

அம்பத்தூர் அருகே வாலிபர் அடித்துக் கொலை - நண்பர் கைது

Published On 2019-07-01 09:07 GMT   |   Update On 2019-07-01 09:07 GMT
அம்பத்தூர் அருகே வாலிபர் அடித்துக் கொலையில் நண்பரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அம்பத்தூர்:

அம்பத்தூரை அடுத்த மாதனாங்குப்பம், புத்தகரம் பகுதியில் வசித்து வருபவர் அந்தோனி. இவர் வீட்டின் அருகிலேயே பழைய இரும்பு பொருட்களை வாங்கி விற்கும் கடை நடத்தி வருகிறார்.

கடந்த வாரம் இவரது கடைக்கு தூத்துக்குடி மாவட்டம் சின்னமடம் கிராமத்தை சேர்ந்த நண்பர்களான மணிகண்டன் (35), முருகேசன் ஆகியோர் வேலைக்கு வந்தனர். அவர்கள், கடையில் உள்ள ஒரு அறையில் தங்கி இருந்தனர்.

இந்த நிலையில் முருகேசன் பற்றி கடை உரிமையாளரிடம் மணிகண்டன் சில தகவல்கள் கூறியதாக தெரிகிறது. இதனால் நண்பர்கள் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

நேற்று இரவு கடையில் உள்ள அறையில் மணிகண்டனும், முருகேசனும் மது குடித்ததாக தெரிகிறது. அப்போது அவர்களுக்கு இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது.

ஆத்திரம் அடைந்த முருகேசன் அருகில் கிடைந்த கட்டையால் மணிகண்டனின் தலையில் தாக்கினார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார்.

அலறல் சத்தம் கேட்டு வந்த கடை உரிமையாளர் அந்தோனி மற்றும் அப்பகுதி மக்கள் உயிருக்கு போராடிய மணிகண்டனை மீட்டு அம்பத்தூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி மணிகண்டன் பரிதாபமாக இறந்தார். அவர் கொலையுண்டது பற்றி சொந்த ஊரில் உள்ள பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து கொரட்டூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து முருகேசனை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

Similar News