செய்திகள்

வேப்பூர் அருகே கிணற்றில் குளித்தபோது சேற்றில் சிக்கி மாணவன் பலி

Published On 2019-06-23 15:15 GMT   |   Update On 2019-06-23 15:15 GMT
வேப்பூர் அருகே நண்பர்களுடன் கிணற்றில் குளித்த மாணவர் சேற்றில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். தீயணைப்பு படையினர் உடலை மீட்டனர்.

வேப்பூர்:

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள பெரியநெசலூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் நரேந்திரன் (வயது 15).

இவன் அங்குள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று விடுமுறையையொட்டி மாலையில் நரேந்திரன் மற்றும் அவரது நண்பர்கள் அங்குள்ள விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் குளிக்க சென்றனர்.

அவர்கள் கிணற்றின் மேல் நின்று உள்ளே டைவ் அடித்தனர். கிணற்றில் ஆனந்தமாக குளித்தனர்.

பின்னர் நரேந்திரனின் நண்பர்கள் அனைவரும் குளித்து முடித்து விட்டு கரை திரும்பினர். ஆனால், நரேந்திரனை மட்டும் காண வில்லை.

உடனடியாக அவரது நண்பர்கள் ஊருக்குள் சென்று நரேந்திரனின் பெற்றோரிடம் கூறினர். இதை கேட்டதும் நரேந்திரனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அலறியடித்து கொண்டு கிணற்று பகுதிக்கு வந்தனர்.

பின்னர் அவர்கள் கிணற்றுக்குள் இறங்கி தேடினர். நரேந்திரனின் உடல் கிடைக்கவில்லை. இது குறித்து வேப்பூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் உடனடியாக சம்பவ இடம் விரைந்து வந்தனர்.

அவர்களும் கிணற்றுக்குள் இறங்கி தேடினர். அவர்களாலும் நரேந்திரனின் உடலை கண்டு பிடிக்க முடியவில்லை. உடனே அந்த கிணற்றில் உள்ள தண்ணீரை மின் மோட்டார் மூலம் வெளியேற்றினர். இரவு 11 மணி வரை தண்ணீர் வெளியேற்றப்பட்டது. அதன் பின்னர் தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் இறங்கி பார்த்தனர்.

அப்போது நரேந்திரன் சேற்றில் சிக்கி பிணமாக கிடந்ததை பார்த்தனர். அதன் பின்னர் கயிறு கட்டி நரேந்திரனின் உடலை மீட்டனர்.

மகன் உடலை பார்த்து நரேந்திரனின் பெற்றோர் கதறி அழுதனர். இதைப் பார்க்க பரிதாபமாக இருந்தது. பின்பு நரேந்திரனின் உடல் பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இது குறித்து வேப்பூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News