செய்திகள்

சீர்காழி அருகே இன்று அதிகாலை மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 2 பேர் பலி

Published On 2019-06-07 10:18 GMT   |   Update On 2019-06-07 10:18 GMT
சீர்காழி அருகே இன்று அதிகாலை மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சீர்காழி:

நாகை மாவட்டம் சீர்காழி அடுத்த பழைய பாளையம் சன்னதி தெருவை சேர்ந்தவர் அறிவழகன். இவரது மகன் மார்கோனி (வயது 22), அதே பகுதியை சேர்ந்த மதன மகாராஜா மகன் ராஜபாண்டி (22), கருப்பையா மகன் அஜீத்குமார் (23).

நண்பர்களான இவர்கள் 3 பேரும் இன்று அதிகாலை 2 மணியளவில் பழைய பாளையத்தில் இருந்து பழையாறு நோக்கி ஒரே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை மார் கோனி ஓட்டினார்.

அவர்கள் தர்க்காஸ் என்ற இடத்தில் சென்ற போது அங்கு அதே பகுதியை சேர்ந்த சாரங்கபாணி என்பவர் சாலையில் நடந்து சென்றார். அப்போது அவர் மீது மார்கோனி ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்த மார்கோனி பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதில் காயம் அடைந்த சாரங்கபாணி, ராஜபாண்டி ஆகிய 2 பேரையும் சிதம்பரம் மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சாரங்கபாணி இறந்தார். ராஜபாண்டிக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்தில் அஜீத் குமார் லேசான காயத்துடன் தப்பினார்.

இந்த சம்பவம் குறித்து புதுப்பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News