செய்திகள்

வேதாரண்யம் பகுதியில் 2-வது நாளாக 5 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

Published On 2019-06-01 09:17 GMT   |   Update On 2019-06-01 09:17 GMT
வேதாரண்யம் பகுதியில் கடும் சூறைக்காற்று மற்றும் கடல் சீற்றம் காரணமாக 2-வது நாளாக 5 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
வேதாரண்யம்:

வேதாரண்யம் தாலுக்கா கோடியக்கரை ஆறுகாட்டுத்துறை புஷ்பவனம் வெள்ளப்பள்ளம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமத்தில் கடும் சூறைக்காற்று மற்றும் கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இதனால் சுமார் 1000 மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் படகுகள் அனைத்தும் கரையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

மீனவர்கள் பிடிக்க செல்லாததால் மீன்வரத்து முற்றிலும் குறைந்து உள்ளது. விசை படகுகளுக்கு தடை காலம் உள்ள நிலையில் சிறிய பைபர் படகுகள் மூலம் தற்போது மீனவர்கள் மீன்பிடித்து வருகின்றனர். நேற்று கடும் சூறைக்காற்றினால் கரை ஓரத்தில் இருந்து படகுகளை கடலுக்கு செலுத்த முடியாமல் பெரும்பாலான மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.

இந்த கடும் காற்றையும் மீறி சென்ற ஒரு சில படகுகளில் குறைந்த அளவே மீன்கள் கிடைத்தன. இதனால் மீனவர்கள் நஷ்டத்தை சந்தித்துள்ளனர். இதனால் மிக குறைந்த அளவில் கிடைத்த வாவல் மீன்கள் கிலோ ரூ.1000-க்கும் காலா மீன்கள் ரூ.800-க்கும், நண்டு ரூ.300-க்கும் சிறிய வகை மீன்கள் ரூ.200-க்கும் ஏலம் போயின. காற்று தணிந்து மீன்பிடிக்க ஓரிரு நாட்கள் ஆகும் என மீனவர்கள் தெரிவித்தனர்.

இந்தநிலையில் இன்று (1-ந்தேதி) சூறைக்காற்று தொடர்ந்து வீசிவருவதால் வேதாதாரண்யம் பகுதியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.

Tags:    

Similar News